டெல்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தலைநகர் டெல்லியில் காங்கிரஸ்  இடையே நடைபெற்று வந்த தொகுதிப்பங்பீடு முடிவடைந்து உள்ளது. அதன்படி ஆம் ஆத்மி 4 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, தேர்தல் பரப்புரை, கூட்டணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் மும்முரமாக இறங்கி உள்ளன. இதற்கிடையில், எதிர்க்கட்சிகளைக்கொண்ட இண்டி கூட்டணியில் சலசலப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.  மேற்குவங்கம், பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்க கூட்டணி கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி மறுத்து வருகின்றன.

இதற்கிடையில், உ.பி.யில் கூட்டணி கட்சியான சமாஜ்வாதி காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கி அறிவித்தது. இந்த நிலையில், டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியும் சில தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி உள்ளது. டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.