டெல்லி: மக்களவையில் பேப்பரை வீசி அமளியில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின்  எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதி மணி உள்பட 10 எம்.பி.க்கள்  தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சினை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த ஒரு வாரமாக இரு அவைகளும் முடங்கி கிடக்கின்றன.

இந்த நிலையில், இன்று  பெகாசஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இதில்,  மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமை தாங்கினார்.  இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். இதில், பெகாசஸ் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக ஒன்றிணைந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் ஒரு விவாதம் நடத்த  அரசாங்கத்திற்கு  அழுத்தம் கொடுக்க முடிவு செய்தனர். அதையடுத்து,  பெகாசஸ் ஊழல் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளும் மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாராளுமன்ற ராஜ்யசபாவின் இன்றைய கூட்டத்தில்,  பெகாசஸ் குறித்து  விவாதிக்க வேண்டும் என முதன்முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக  கோரிக்கை விடுத்தனர். அப்போது தமிழக எம்.பிக்கள்  வேண்டும், வேண்டும் விவாதம் வேண்டும் என்று தமிழில் முழக்கமிட்டனர். அதைத்தொடர்ந்து மற்ற மாநில எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் விவாதம் வேண்டும் என்று தமிழிலேயே முழக்கமிட்டனர்.

இந்த நிலையில் மக்களவை பிற்பகல் கூடியதும்,  எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கு இடையே மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, சிறார் பாதுகாப்பு மற்றும் நீதிக்கான சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். பேப்பரை தூக்கி வீசி அவமரியாதை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து,  காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி உட்பட சுமார் 10 எம்.பி.க்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதித்து மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டு உள்ளார். மக்களவை நடவடிக்கைகளுக்கு குந்தகமாக செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எம்.பி.க்கள் மணிக்கம் தாகூர், டீன் குரியகோஸ், ஹிபி ஈடன், எஸ்.ஜோஈமணி, ரவ்னீத் பிட்டு, குர்ஜீத் அஜ்லா, டி.என்.பிரதாபன், வி.வைதிலிங்கம், சப்தகிரி சங்கர், ஏ.எம். ஆரிப், தீபக் பைஜ் ஆகியோர் கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பின்னர் மக்களவை நடவடிக்கைகள் நாளைக்கு  ஒத்திவைக்கப்பட்டன.

மாநிலங்களைவையில் எழுப்பப்பட்ட கோஷம் குறித்து இது குறித்து முன்னாள் மத்திய மந்திரியும்  காங்கிரஸ் எம்பியுமான ஜெயராம் ரமேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். வழக்கமான மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் கோஷம் எழுப்புவார்கள். ஆனால் இந்த முறை வித்தியாசமாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரையும் தமிழ் மொழி இணைத்துள்ளது என தெரிவித்து உள்ளார்.