மும்பை: எதிர்வரும் ஐபிஎல் தொடரில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் ரிஷப் பன்ட், தனது முதல் போட்டியில், தனது கிரிக்கெட் குருநாதர் எனப்படும் தோனியின் சென்னை அணியை எதிர்கொள்கிறார்.

இந்தப் போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமையன்று, இரு அணிகள் மோதும் போட்டி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ரிஷப் பன்ட் கூறியுள்ளதாவது, “ஒரு கேப்டனாக எனது முதல் போட்டியில், எம்எஸ்.தோனியின் அணியை எதிர்கொள்வது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். ஒரு விளையாட்டு வீரராக எனது சொந்த அனுபவமும் உள்ளது.

எனவே, எனது சொந்த அனுபவம் மற்றும் தோனியிடமிருந்து கற்றுக்கொண்டது ஆகிய இரண்டையும் போட்டியில் பயன்படுத்துவேன். சென்ன‍ை அணிக்கு எதிராக வித்தியாசமாக செயல்பட முயல்வேன்.

போட்டியில், சிறப்பாக செயல்பட வேண்டுமென ஒவ்வொருவரும் நன்கு திட்டம் வகுத்திருப்பார்கள். அத்தகைய மனநிலையைத்தான் ஒரு கேப்டனாக அனைவரும் விரும்புவார்கள். தலைமைப் பயிற்சியாளர் என்ற முறையில் கடந்த சில ஆண்டுகளாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ரிக்கிப் பாண்டிங்” என்றுள்ளார் பன்ட்.