ழனி

ழனிமலை முருகன் கோவிலில் சுமார் 2 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.

பழனிமலை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாகும். இந்த பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.  பக்தர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது.

தவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் சென்று வர ரோப் கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இவற்றில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப் கார் உள்ளது.

ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது ரோப் கார் சேவை நிறுத்தப்படும்.   கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ரோப் கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.

ரோப் காரில் பெட்டிகள், இரும்பு சக்கரங்கள், கம்பி வடம் உள்ளிட்டவை மாற்றப்பட்டு கடந்த இரு தினங்களாக, சோதனை ஓட்டம் நடைபெற்றது., எனவே பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கோவிலில் ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.