ஸ்லாமாபாத்

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தை பாகிஸ்தான் கூர்ந்து கவனித்து வருகிறது என அந்நாட்டின் தினசரி ஒன்று தெரிவித்துள்ளது.

பாக் நாட்டின் தி எக்ஸ்பிரெஸ் ட்ரிப்யூன் என்னும் தினசரி, பாகிஸ்தான் மோடியின் இஸ்ரேல் பயணத்தைப் பற்றி ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், அவர் பயணத்தை கூர்ந்து கவனித்து வருகிறது எனா செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் “இந்தியா – இஸ்ரேல் உறவு மோடியின் பயணத்தினால் மேலும் பலப்படும்.  இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, ராணுவம் போன்ற துறைகளின் ஒப்பந்தம் ரகசியமாக உள்ளது.  இனி வெளிப்படையாகவே இஸ்ரேலில் இருந்து ராணுவ தளவாடங்கள் இந்தியாவால் வாங்கப்படும்.  இரு நாடுகளும் பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்பது பாகிஸ்தானை மனதில் கொண்டு தான் முழங்குகின்றன.   இது பற்றி வெளிப்படையாக பாக் கருத்து தெரிவிக்கவில்லை.   ஆனால் மோடியின் பயணத்தை கூர்ந்து கவனித்து வருகிறது.” எனக் கூறி உள்ளது.

இது குறித்து பல அரசியல் நோக்கர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.   அவர்கள் மோடியின் வருகையை இஸ்ரேல் மிகவும் கொண்டாடுவதையும்,  பிரதமரும்,  அனைத்து அமைச்சர்களும் அவரை வரவேற்க விமான நிலையம் சென்றதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

மேலும் அவர்கள் தெரிவித்தது.

”மோடி இஸ்ரேல் செல்லும் முன், பயங்கரவாதம் இருநாட்டுக்குமே பொதுவான பிரச்னை என்றும் அதனை வேரோடு ஒழிக்க இருநாடுகளும் இணைந்து செயல்படும் என கூறியதும் பாகிஸ்தானுக்கு சிறிது பயத்தைக் கொடுத்துள்ளது.  பாகிஸ்தானும் இஸ்ரேலுடன் உறவை மேம்படுத்திக் கொள்வதில் தவறில்லை.  இஸ்ரேலுக்கு பாக் உடன் விரோதமில்லை, அவர்களுக்கு வளைகுடா நாடுகள் தான் எதிரிகள்” என கூறினர்.

முந்தைய பர்வேஸ் முஷாரஃப் ஆட்சிக்காலத்தில் இஸ்ரேலும், பாகிஸ்தானும், நட்புடன் இருப்பதற்காக இரு நாடுகளின் அமைச்சர்களும், துருக்கியில் கலந்துரையாடல் நிகழ்த்தியதும், ஆனால் அந்த கலந்துரையாடல் பாதியிலேயே முறிந்து போனதும் தெரிந்ததே..