காஷ்மீரில் நடைபெற்ற பயங்கவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
மார்ச் 7ம் தேதி நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டது.
இந்த நிலையில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்றிரவு நடைபெற்ற தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் எல்லையோர பகுதிகளில் இந்திய ராணுவம் உஷார் நிலையை அறிவித்ததை அடுத்து வான் பாதுகாப்பு அமைப்பு செயல்பாட்டுக்கு வந்தது.
இதையடுத்து பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதுடன் 15 இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தான் நடத்த திட்டமிட்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் துருக்கி நாட்டில் தயாரிக்கப்பட்ட டிரோன் உள்ளிட்ட சில ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இன்று மாலை முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உரி, தங்தார், கேரன், மெந்தர், நவ்காம் மற்றும் பூஞ்ச் ஆகிய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
தவிர, பதான்கோட் உள்ளிட்ட பிற பகுதிகளில் தாக்குதல் நடைபெற்று வருவதை அடுத்து அந்த இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
மேலும், பாகிஸ்தானின் தாக்குதலை முறியடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள இந்திய ராணுவம் அதில் வெற்றிபெற்று வருகிறது.
இருந்தபோதும் பாகிஸ்தானின் இந்த தொடர் அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வர இந்திய ராணுவம் விரைவில் தகுந்த பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.