டில்லி:

பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்கள் வன்முறையாகிய நிலையில் சட்டம் மற்றும் ஒழுங்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பத்மாவத் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் கர்னி சேனா அமைப்பினர் ராஜஸ்தான், குஜராத், உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தின் பின்னணியில் பா.ஜ.க., உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிஉள்ளன.

அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜனதா தலைமையிலான அரசுக்கள் நடவடிக்கையை எடுக்கவில்லை காங்கிரஸ் கண்டனம் செய்துள்ளது. இந்த நிலையில் பத்மாவத் போராட்டங்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தீர்ப்பது மாநிலங்கள் சம்பந்தப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், “சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசுக்களின் பொறுப்பாகும்,

இதில் மத்திய படைகளை அனுப்புவது தவிர்த்து மத்திய அரசின் பணி எதுவும் கிடையாது” என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதோடு, “திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறும் பகுதிகள் மற்றும் கூட்டு வன்முறை தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ள பகுதிகளில் மாநில அரசுக்கள் ஆயுதம் தாங்கிய சிறப்பு போலீஸ் படையை நிலை நிறுத்த வேண்டும்” என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.