சிம்லா

பிரதமர் மோடி காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைக் களங்கப்படுத்துவதாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ராஜஸ்தானில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது 0காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைத் தாக்கியும், இஸ்லாமியர்கள் குறித்து தெரிவித்த கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. காங்கிரஸ், இந்தியா கூட்டணிக் கட்சிகள் பரவலாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இன்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சிம்லாவில் செய்தியாளர்களிடம்,

“காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் ஆதரித்த கருத்துகளை, மோடியால் சுட்டிக்காட்ட முடியுமா?. அதிகம் பாதிக்கப்பட்டவர்களாகப் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர்கள் மற்றும் ஏழைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கான நீதி வழங்கும் திட்டங்கள் காங்கிரஸ் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

காங்கிரசின் தேர்தல் அறிக்கை, தமிழகத்தின் தொலைதூரக் கிராமங்களைக் கூட சென்றடைந்துள்ளது. அதோடு நாடு முழுவதும் பேசு பொருளாகவும் மாறியுள்ளது. ஆனால் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை 2 மணி நேரத்தில் சுவடு தெரியாமல் காணாமல் போனது. அதில் எதுவும் இல்லை என்பதால் யாரும் அதைப்பற்றிப் பேசுவதில்லை.  

மோடியின் கேரண்டி அரசியல் கட்சியின் அறிக்கையாக இருக்க முடியாது, எனவே அவர் காங்கிரஸ் அறிக்கையைப் பார்த்து பொறாமை கொள்கிறார். எனவே பிரதமர் மோடி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை யைக் களங்கப்படுத்துகிறார். முதலில் பிரதமர் மோடி, காங்கிரசின் தேர்தல் அறிக்கையை முழுமையாகப் படிக்குமாறு வலியுறுத்துகிறேன்”

என்று கூறி உள்ளார்.