டெல்லி: புதிய நாடாளுமன்ற வளாகம் (சென்ட்ரல் விஸ்டா) கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 50% பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டுமான பணிகளில் பாரத பிரதமர் தங்குவதற்கான புதிய குடியிருப்பு கட்டிடமும் கட்டப்பட்டு வருகிறது. இவைகள் அனைத்தும் 2021 டிசம்பருக்குள்  கட்டப்பட வேண்டும் என மத்திய அரசு தரபபில் கெடு விதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 64500 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட 13450 கோடி ரூபாய் இந்த கட்டுமான பணிகளுக்கான செலவு இருக்கும் என தெரிகிறது. சென்ட்ரல் விஸ்டா புராஜக்ட் என்ற திட்டத்தின் கீழ் இந்த கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

அத்தியாவசிய சேவையின் கீழ் இந்த திட்டம் இயங்கி வருவதால் கொரோனா தொற்று பரவலினால் ஊரடங்கு நடைமுறை அமலில் இருந்தாலும் இந்த கட்டுமான பணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி பணிகள் நடைபெற்று வருகின்றன.. அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய விஸ்டா பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.