சென்னை: ஓ.பி.எஸ் மனைவி விஜயலட்சுமி மரணம் அடைந்த செய்தியறிந்த, சசிகலா, உடனே மருத்துவமனைக்கு விரைந்து வந்து, அங்கிருந்த  ஓபிஎஸ் கரங்களை பற்றி ஆறுதல் கூறி, அவரது மனைவியின் உடலுக்கு  அஞ்சலி செலுத்தினார். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு அதிமுகவினரிடைய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான  ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (வயது 66) இன்று காலை மாரடைப்பால் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்த சசிகலா,  ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். அங்கு ஓபிஎஸ்-ஐ சந்தித்து பேசிய சசிகலா, அவரது கைகளை பற்றி  ஆறுதல் கூறினார்.  சிறிது நேரம் அவரது அருகில் அமர்ந்து, அவரை தேற்றினார். அப்போது ஓபிஎஸ் கண்கலங்கினார். தொடர்ந்து அவரது மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் உடல்  இன்று மதியம் அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது.

ஓபிஎஸ்-க்கு ஆறுதல் கூறும் சசிகலா – வீடியோ