சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்களது துணைவியார் திருமதி. விஜயலட்சுமி உடல்நலப் பாதிப்பு காரணமாக பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காலை ஏற்பட்ட திடீர்  மாரடைப்பால் காலமானார்.

அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, வைகோ, சசிகலா உள்பட பலர்  மருத்துவமனைக்கு நேரடியாக சென்று ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி, ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த நிலையில்,   தெலுங்கான ஆளுநர் தமிழிசை,  திமுக எம்.பி. கனிமொழி, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்னார் உள்டப பலர் டிவிட் மூலம் இரங்கல் தெரிவித்துஉள்ளனர்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,   தமிழக முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவருமான சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு சகோதரியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.

 மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,

தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் துணை முதல்வரும் ஆன திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களது துணைவியார் இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். 

திமுக எம்.பி. கனிமொழி

‘அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இணையரும், மக்களவை உறுப்பினர் திரு.ரவீந்திரநாத் அவர்களின் தாயாருமான விஜயலட்சுமி அவர்கள் மறைவுற்ற செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’  என பதிவிட்டுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாககிருஷ்ணன்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் இணையரும், மக்களவை உறுப்பினர் ஓ.ரவீந்திரநாத்தின் தாயாருமான விஜயலட்சுமி அவர்கள் மறைவுற்ற செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அவரது பிரிவைத் தாங்கும் மனவலிமையத் தரவும், அன்னாரின் ஆன்மா நற்கதியடையவும் எல்லாம்வல்ல அன்னை சக்தியைப் பிரார்த்திக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக எம்எல்எ வானதி சீனிவாசன்,

தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான அஇதிமுக ஒருங்கிணைப்பாளருமான அண்ணன் OPS அவர்களின் துணைவியார் மற்றும் மக்களவை உறுப்பினர் O.P.Ravindhranath அவர்களின் தாயார் திருமதி.விஜயலட்சுமி அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. நேரில் சந்தித்து எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் . அம்மையாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

தனது டிவிட்டர்பதிவில்,  ‘முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஐயா  ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் அம்மையார் விஜயலட்சுமி அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

வாழ்க்கைத்துணையை இழந்து பெருந்துயருற்றுள்ள ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், தாயை இழந்து வாடும் தம்பிகள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், தங்கை கவிதா ஆகியோருக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.