டில்லி,

நேற்று மாலை டில்லி சென்ற தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

சசிகலா பரோலில் வந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், பிரதமரை சந்திக்க ஓபிஎஸ் அணியினர் நேற்று மாலை திடீரென டில்லி புறப்பட்டு சென்றனர்.

அவருடன் அமைச்சர் தங்கமணி, மைத்ரேயன், மனோஜ்பாண்டியன், கே.பி.முனுசாமி உள்பட பலர்  சென்றனர். இன்று காலை 11 மணி அளவில் டில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் அவர்கள் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின்போது  தமிழக அரசியல் நிலவரம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் உள்ள வழக்கு  போன்றவை குறித்து  மோடியுடன்  ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதையடுத்து,. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிர்மலா சீத்தாராமன் போன்ற மத்திய அமைச்சர்களையும் சந்திப்பார்கள் என கூறப்படுகிறது.

ஏற்கனவே இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணையின்போது டில்லி சென்ற ஓபிஎஸ்-ஐ பிரதமர் சந்திக்க நேரம் ஒதுக்காத நிலையில், தற்போது பிரதமரை ஓபிஎஸ் சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியலில்  மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.