டெல்லி: ஓபிஎஸ் உள்ளிட்ட 11  எம்எல்ஏக்களை தகுதிநீக்க வழக்கு நாளை  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ம் தேதி ஓட்டெடுப்பு நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
அவர்களை தகுதிநீக்க கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
அதனையடுத்து ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். பின்னர் திமுக உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் 3 மாதங்கள் கடந்தும் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க செய்ய கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.