சென்னை: ஓபிஎஸ் பசுந்தோல் போர்த்திய புலி.! இபிஎஸ்யை அழைக்க அவருக்கு எந்த தகுதியும் கிடையாது என மதுரை மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பா கூறினார். அதுபோல சசிகலாவை கட்சியில் சேர்க்க கூறும் ஓபிஎஸ், யாருக்காக தர்ம யுத்தத்தை தொடங்கினார், அவரது தர்மயுத்தத்தின் முக்கிய நோக்கமே சசிகலாவை கட்சியில் ஏற்கக்கூடாது என்பது தானே கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் வெளியான உயர்நீதிமன்ற தீர்ப்பு  ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது , அவற்றை மனதில் இருந்து அப்புறப்படுத்தி கட்சி ஒன்றுபட வேண்டும். மீண்டும் ஆளும் நிலைக்கு அதிமுக வர வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் , எங்கள் தரப்புக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை. கழக ஒற்றுமையையே அனைவருக்கும் பிரதான கொள்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.  மேலும் சசிகலாவை, டிடிவியை கட்சியில் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதற்கு ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த  அதிமுக அமைப்புச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா அப்போது,  எடப்பாடியாருக்கு வலிமைமிக்க தீர்ப்பினை, கழகத் தொண்டர்கள் ஏற்கனவே வழங்கி விட்டனர், அது மட்டும் அல்ல எடப்பாடியாருக்கு பின்னால் 63 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், மேலும் 2663 பொதுக்குழு உறுப்பினர்களில், அதிக மெஜாரிட்டியாக எடப்பாடியாரை இடைக்கால பொதுச் செயலாளர் என்று தேர்வு செய்தனர். சிலர் இடைக்கால தீர்ப்பை  பெற்று சில அறிக்கையை விடுகின்றனர், இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை மேல்முறையீடு உள்ளது, என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், ஓபிஎஸ் பேசும்போது, கசப்பை மறக்க வேண்டும் என்று சொன்னார்., ஆனால் திமுகவுடன் தொடர்பு வைத்தவர்களை எப்படி மறக்க முடியும்? இனி வசந்த காலம் என்கிறார் ஒபிஎஸ், திமுகவில் தொடர்பு உள்ளவர்களை எப்படி வசந்த காலம் என்று ஏற்கமுடியும்.  ஒபிஎஸ்யை இதுவரையும் யாரும் ஆதரிக்கிறோம் என்று சொல்லவில்லை, இன்றைக்கு எடப்பாடியார் பின்னால் ஆடாமல், அசையாமல், வலுவோடு இந்த இயக்கம் உள்ளது, மிகச்சிறந்த தலைமையாக எடப்பாடியார் தலைமை உள்ளது, திமுகவிற்கு எதிர்க்கக்கூடிய தலைமையாக எடப்பாடியார் தலைமை உள்ளது என்றவர், இடைக்கால  தீர்ப்பை மட்டும் வைத்துக் கொண்டு கட்சி வளர்க்க முடியாது, நீதிமன்றம்  கட்சிகளை நடத்த முடியாது, கட்சி விவகாரங்களை தலையிடாது என்பது நாடறிந்த உண்மை. ஓபிஎஸ் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறுகிறார், அவருக்கு அழைக்க எந்த தகுதியும் இல்லை,  அவர் அழைத்தது தவறு,  கூட்டுத் தலைமை என்று ஓபிஎஸ் கூறுகிறார். நாடாளுமன்ற வேட்பாளர்கள், சட்டமன்ற வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டது, யாரும் கூட்டுத் தலைமையை விரும்பவில்லை, இரட்டை தலைமையை ஏற்றுக் கொள்ள மனநிலையில் யாரும் இல்லை.

எப்பொழுது எல்லாம் தனக்கு சாதகமாக தீர்ப்பு வருகிறதோ, அப்போது எல்லம் தென் மாவட்டங்களுக்கு ஓபிஎஸ் வருகிறார், இதன் மூலம் தென் மாவட்ட பகுதிகளை உரிமை கொண்டாட முயற்சி செய்கிறார், தென் மாவட்டம் என்பது ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது, தென் மாவட்டத்தில் ஓபிஎஸ்க்கு தனி செல்வாக்கு என்பது கிடையாது.  ஜானகி அம்மாள் புரட்சித்தலைவி அம்மாவிடம் கட்சியை விட்டுக் கொடுத்தார்கள், ஆனால் ஓபிஎஸ் அப்படி இல்ல பசுந்தோல் போர்த்திய புலி ,தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து கழக தொண்டர்களும், மக்களும் எடப்பாடியார் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர் . சசிகலாவும், அவருடைய குடும்பமும் வரக்கூடாது என்பதற்குதான் தர்மயுத்தமே நடத்தினார். ஆனால் சுயநலத்திற்காக தன்னுடைய நிறத்தை இப்போது ஓ.பன்னீர்செல்வம் காட்டியிருக்கிறார் என்று குற்றம்சாட்டினார். ஒன்றினைவது பற்றி இன்று கருத்து கூறும் ஓபிஎஸ் பொதுக்குழுவிற்கு நேராக வந்திருந்தால், கட்சிக்கு விஸ்வாசமாக இருக்கிறார் என்று ஏற்றிருப்போம்.

அதுபோல சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்எ கே.பி.முனுசாமி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது,  ஓபிஎஸ் மீண்டும் சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். ஆனால் இவர் தர்மயுத்தத்தை தொடங்கியபோது அதன் முக்கிய நோக்கமே சசிகலாவை கட்சியில் ஏற்கக்கூடாது என்பதுதான். சசிகலாவும், அவருடைய குடும்பமும் வரக்கூடாது என்பதற்குதான் தர்மயுத்தமே நடத்தினார். ஆனால் இன்று தனது சுயநலத்திற்காக தன்னுடைய நிறத்தை  காட்டியிருக்கிறார் என்றவர்,  ஒன்றினைவது பற்றி இன்று கருத்து கூறும் ஓபிஎஸ் பொதுக்குழுவிற்கு நேராக வந்திருந்தால், கட்சிக்கு விஸ்வாசமாக இருக்கிறார் என்று ஏற்றிருப்போம். மாறாக  மறைந்த தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா அமர்ந்த கட்சி அலுவலகத்தை சூறையாடினார். அதற்கு தலைமை ஏற்றவர் தான் ஓபிஎஸ், அப்போது ஏன் இந்த ஒற்றுமை கருத்து அவருக்கு வரவில்லை என கேள்வி எழுப்பினார்.

கட்சிக்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் வெளியில் இருக்கிறார்கள். கட்சியில் ஆதாயமடைந்தவர்களை தான் அவர் ஒன்றிணைய கூறுகிறார். எனவே ஆதாயமடைந்தவர்கள் கட்சிக்கு தேவையில்லை என்றும் உழைப்பவர்கள் தான் தேவை என்றும் கே.பி.முனுசாமி காட்டமாக கூறியுள்ளார்.