டில்லி

பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை குறித்து விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.

கடந்த 2 மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் நீடித்து வருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ள நிலையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய அரசை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றன.

சமீபத்தில் மணிப்பூரில் கலவரத்தின் போது 2 பெண்களை ஒரு தரப்பு ஆண்கள் நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும், விவாதம் நடத்தவும் உள்துறை  அமைச்சர் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் முதலில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் அவை நடவடிக்கைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

வரும் திங்கள் அன்று மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் தொடங்கிய உடன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் திரண்டு போராட்டம் நடத்த  திட்டமிட்டுள்ளன.