டில்லி

முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் டிவிட்டரில் பாஜக அரசைக் கடுகையாகத் தாக்கி பதிவிட்டுள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு மேல் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் வன்முறை நீடித்து  வருகிறது. பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை பழங்குடியின சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அப்போது அவர்கள் நடத்திய பேரணியின்போது, வன்முறை வெடித்து அது அம்மாநிலம் முழுவதும் பரவி, மணிப்பூர் முழுவதுமே கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது. வன்முறையில் சிக்கி இது வரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தவிர ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் மணிப்பூரை விட்டு காலி செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் எனவும், பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மத்திய முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில்,

”பீகார், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை ஒப்புக்கொள்வோம். ஆனால், மணிப்பூரில் தொடரும் இடைவிடாத வன்முறைக்கு, பிற மாநில பிரச்சினைகளிலிருந்து எப்படி பரிகாரம் தேடிக் கொள்ள முடியும்? எப்படி அதனை மன்னிக்க முடியும்?

பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடுமையான நடவடிக்கை தேவைப்பட்டால், மாநில அரசுகளைக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துங்கள், மணிப்பூரில் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்தை மன்னிக்க முடியாது.  மணிப்பூர் பாஜக அரசு வீழ்ச்சியடைந்து விட்டது. மத்திய பாஜக அரசு கோமாவில் உள்ளது”

என்று பதிவிட்டுள்ளார்.