டில்லி

பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வராமல் 130 கோடி மக்களை அவமதிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடியை விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.  ஆனால் அதற்கு மோடி செவி சாய்க்காததால் அமளி ஏற்பட்டு நாடாளுமன்ற அவைகள் தொடர்ந்து முடக்கப்படுகின்றன.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள்,

”மணிப்பூர் மாநிலத்தில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுபோல் பல சம்பவங்கள் நடந்திருப்பதாக முதல்வரே ஒப்புக்கொண்டுள்ளார்.  ஆகவே, நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்துவதுதான் முதல் முன்னுரிமை பணியாக இருக்க வேண்டும். அங்கு எத்தனை பலாத்காரங்கள் நடந்தன என்றே தெரியவில்லை.

பிரதமர் மோடி அரசியல் சட்டத்தின் 75-வது பிரிவின்கீழ், நாடாளுமன்றத்துக்குப் பதில் அளிக்க வேண்டியவர் ஆவார். எனவே அவர் சபைக்கு வந்து பேச வேண்டும்.  அவர் உள்நாட்டில் இருந்து கொண்டே நாடாளுமன்றத்துக்கு வராததற்கு ஒரு காரணத்தைக் கூற முடியுமா?

மக்களவையையும், மாநிலங்களவையையும் அவமதிப்பதைப் பிரதமர் மோடி நிறுத்த வேண்டும். பிரதமர் மோடி இரு அவைகளை மட்டுமின்றி, 130 கோடி மக்களையும் பிரதமர் மோடி அவமதித்து வருகிறார். இதன்மூலம் அவர் எதை மறைக்க விரும்புகிறார்? மணிப்பூர் பற்றி பிரதமர் நாடாளுமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

‘இந்தியா’ கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூர் சென்று வந்து அங்குப் பார்த்ததைப் பேச விரும்புகின்றனர். எனவே, விரிவான விவாதம் நடத்த வேண்டும்.

ஒரே ஒரு திரௌபதிக்காக மகாபாரதம் நடந்தது. ஆனால் இங்கு எண்ணற்ற திரௌபதிகள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர். கார்கில் வீரரின் மனைவியும் மானபங்கம் செய்யப்பட்டுள்ளார்.   எல்லாம் அறிந்த பிரதமர், சபைக்கு வர வேண்டும். காலவரையின்றி விவாதம் நடத்தப்பட வேண்டும்.”

என்று கூறியுள்ளனர்.