டில்லி

திர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரிடம் மணிப்பூர் விவகாரம் குறித்து முறையிட்டுள்ளனர்.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுக்களுக்கு இடையே வன்முறை நீடித்து வருகிறது. இந்த வன்முறை கடந்த மே 3-ம் தேதி தொடங்கி இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இங்கு வன்முறையை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மணிப்பூர் வன்முறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த மே 4ம் தேதி ஆண்கள் கும்பலால் குகி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 30 ஆம் தேதி களநிலவரத்தை ஆராய எதிர்க்கட்சி கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் மணிப்பூர் சென்று வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு பிறகு அம்மாநில ஆளுநரையும் சந்தித்தனர்.

இன்று, மணிப்பூரில் களநிலவரத்தை ஆய்வு செய்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி திரௌபதி முர்முவிடம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டனர்.

தவிர வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிடைத்த தகவல்களையும், கள நிலவரத்தையும் அறிக்கையாக அவர்கள் குடியரசுத் தலைவரிடம் வழங்கினர்.