டில்லி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணியமகா நடக்கும் வரை மக்களவைக்கு வர மாட்டேன் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

கடந்த 30 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து கடந்த 9 நாட்களாக நடைபெற்று வரும் கூட்ட தொடரில், மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பிரதமர் அவையில் விளக்கம் அளிக்கவில்லை. இதைக் கண்டித்து மத்திய அரசு மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்தனர்.

வரும் 8ஆம் தேதி இந்த தீர்மானம் மீதான விவாதம் துவங்க உள்ளது. பிறகு 10 ஆம் தேதி பிரதமர் மோடி விளக்கம் அளிக்க உள்ளார். அன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இன்று காலை சபை நடவடிக்கைகள் தொடங்கியபோது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.

எனவே 10வது நாளாக இன்றும் மக்களவை தொடங்கிய சில நிமிடங்களில் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையின் செயல்பாடு குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் மீது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையின் கண்ணியத்திற்கு ஏற்ப  நடந்து கொள்ளும் வரை மக்களவைக்கு வரமாட்டேன் என்று  அவர் இரு தரப்பிடமும் கூறி உள்ளதாக வந்த செய்தி அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது..