டெல்லி: ஆன்லைன் தேர்வுகளை எழுதும் கல்லூரி மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து தேர்வு  எழுதலாம் என்று அகில இந்திய தொழிநுட்ப கவுன்சில் (AICTE) தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, பல மாநிலங்களில் கல்விநிலையங்கள் மூடப்பட்டு, மீண்டும் ஆன்லைன் மூலம் பாடம் போதிக்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து இறுதியாண்டு தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும், அரியர் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாட்டிலும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் தலைமை அமைப்பான அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆன்லைன் தேர்வுகளில் மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதலாம் என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவை மாணவர்களின் திறனை சோதிப்பதற்காக நடத்தப்படும் தேர்வுகளில் மாணவர்கள் புத்தகங்களை பார்த்து எழுதுவதற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போது ஏஐசிடிஇ-யும் அனுமதி வழங்கி உள்ளது.