சென்னை: தமிழகத்தில் மே 24 முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுக்க தற்போது தளர்வுகளுடன் பொதுமுடக்கம்அமலில்  உள்ளது.  இந்த பொதுமுடக்கமான 24ந்தேதியுடன் முடிவடையும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று  மருத்துவ நிபுணர்கள், அனைத்து கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் தமிழக முதல்வர் ஆலோசனையை நடத்தினார். இந்த கூட்டத்தில், தொற்று பரவலை குறைக்க, ஊரடங்கை மேலும் கடுமையாக வேண்டும் என ஒரு  மனதான தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து, முதல்வர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்தாவது,

மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, தமிழகத்தில் 25.3.21 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு தற்போது 10.05.2021 காலை 04.00 மணி முதல் 24.05.2021 காலை 04.00 மணி முடிய அமல்படுத்தப்பட்டுள்ளது.

பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.

மே 24 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகத்தில் அமலில் இருக்கும். தளர்வுகளற்ற இந்த முழு ஊரடங்கில், தமிழகத்தில் காய்கறி கடைகள், மளிகை கடைகள் ஆகியவையும் இயங்காது என்றும் கூறபட்டுள்ளது.

முழு ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட செயல்பாடுகள்  அனுமதிக்கப்படும்.

மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள்.

பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிகை விநியோகம்.

பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.

தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும்.

தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மின்னணு சேவை காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை இயங்கலாம்.

உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

*Swiggy, Zomato போன்ற மின் வணிகம் ((e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்

பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்

ஏடிஎம் மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.

வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களைக் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.

உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

*மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.

செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.

தடையின்றித் தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.

 பொதுமக்கள் நலன் கருதி, இன்று (22-5-2021) இரவு 9 மணிவரையிலும், நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.

மால்கள் திறந்திட அனுமதி கிடையாது.

*வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று (22.05.2021) மற்றும் நாளை (23.05.2021) தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும். மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.மேற்கண்ட விவரங்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.