சென்னை: திமுக அரசு கல்விக்கடன் தள்ளுபடி விவகாரத்தில், அன்று ஒரு பேச்சு; இன்று ஒரு பேச்சு என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தி.மு.க அரசை கடுமையாக சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், பாமகவை கைப்பற்றுவதில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட அதிகாரப்போட்டியில், பாமகவின் சின்னம் மற்றும் கட்சியை அன்புமணி கைப்பற்றி உள்ளார். இதனால் பாமக இரண்டாக உடைந்துள்ளது. இதையடுத்து, அன்புமணி தலைமையிலான பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. இதன் காரணமாக, ராமதாஸ் தலைமையிலான அதிமுக திமுக கூட்டணியில் இணைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், திமுக கூட்டணியில் ஏற்கனவே விசிக உள்ளதால், விசிகவின் நிலைப்பாடானா., பாமக உள்ள கூட்டணியில் விசிக இருக்காது என்பதால், பாமகவை கூட்டணியில் சேர்க்க திமுக தலைமை ஆர்வம் காட்டவில்லை. இதனால், ராமதாஸ் தரப்பு, புதிதாக கட்சி தொடங்கிய விஜயின் தவெக தலைமையை நாடும் சூழல் உருவாகி உள்ளது. அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது ராமதாசின் அரசியல் நிலைப்பாடுக்கு இழுக்கை ஏற்படுத்தும், இதனால், கடந்த இரு சில மாதங்களாக திமுகவை பாராட்டி வந்த ராமதாஸ் கடந்த சில நாட்களாக திமுகவை விமர்சிக்க தொடங்கி உள்ளார்.
இதுதொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஜனவரி 26ந்தேதி வெளியிட்ட அறிக்கையில், மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிப்பதற்கு ஏதுவாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என 2021-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி அளித்த தி.மு.க அரசு, தற்போது தனது வாக்குறுதியில் அலட்சியம் காட்டுவதாகவும், சட்டமன்றத் தேர்தல் கோடை காலத்தில் வரும்போது அதிக மின்கட்டணம் செலுத்தும் மக்கள் தங்கள் கோபத்தை வாக்களிப்பதில் காண்பிப்பார்கள் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஜனவரி 27ந்தேதி (செவ்வாய்க்கிழமை ) வெளியிட்ட தனது மற்றொரு அறிக்கையில், கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் அனைத்து தரப்பு மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வலியுறுத்திய மு.க.ஸ்டாலின், தனது ஆட்சியில் கடந்த ஆண்டு பட்டியலின மாணவர்களின் 48 கோடி ரூபாய் கல்விக் கடனை மட்டுமே தள்ளுபடி செய்திருப்பதாக கூறியுள்ளார். கல்விக்கடன் தள்ளுபடியில் தி.மு.கவின் நிலைப்பாடு; அன்று ஒரு பேச்சு; இன்று ஒரு பேச்சு எனவும் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் , கல்விக்கடன் தள்ளுபடியில் தி.மு.க.வின் நிலைப்பாடு; அன்று ஒரு பேச்சு; இன்று ஒரு பேச்சு; 2021 சட்டமன்ற தேர்தலின் போது, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயின்று, தமிழக கல்லூரிகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வங்கிக்கடன் பெற்ற தமிழக மாணவர்கள் ஓராண்டு காலத்திற்குள் கடனை செலுத்த இயலாவிட்டால் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் கல்விக்கடனை அரசே திருப்பி செலுத்தும் என தி.மு.க. 159-வது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது.
தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் தரவுகளின்படி, முன்னுரிமைத் துறை கடனின் கீழ் வங்கிகளின் நிலுவையில் உள்ள கல்விக் கடன் இலாகா டிச.31, 2023 நிலவரப்படி ரூ.11,122.65 கோடியாக இருந்தது, இது செப்டம்பர் 2023 நிலவரப்படி ரூ.11,589.93 கோடியிலிருந்து ரூ.467 கோடி குறைந்துள்ளது. முன்னுரிமைத்துறை கடனின் கீழ் கல்விக்கடன் வாராக்கடன் டிச.2023 நிலவரப்படி ரூ.4,123.91 கோடியாக இருந்தது. மாநிலத்தில் உள்ள வங்கிகள் ஏப்.2023 முதல் டிச.2023 வரை ரூ.2,857.75 கோடி கல்விக் கடன்களை அனுமதித்துள்ளன. மேலும் கடன்கள் (முந்தைய ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்டவை உட்பட) ரூ.2,064.06 கோடி வரை வழங்கப்பட்டுள்ளன என்று தரவுகள் காட்டுகிறது.
2017 ஜூன் மாதம் அப்போதைய தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 2013 -ம் ஆண்டில், தமிழகத்தை சேர்ந்த 8,86,752 மாணவர்களின் கல்விக்கடன் ரூ.13,343.65 கோடி நிலுவையில் இருந்தது. ஆனால் 2015-ல் அந்த கல்விக் கடன் நிலுவைத் தொகை ரூ.16,313.06 கோடியாகவும், மாணவர்களின் எண்ணிக்கை 9,60,202 ஆக அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிவரப்படி, மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் 2013-லிருந்து 2015-ம் ஆண்டு 22.3% உயர்ந்துள்ளது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 8% மட்டுமே உயர்ந்திருக்கிறது.
அதேபோல் 2013-ம் ஆண்டு மாணவர்கள் பெற்ற சராசரி கல்விக்கடன் 2013-ல் ரூ.1,50,478 ஆக இருந்தது. அது 2015-ல் ரூ.1,69,892 ஆக மட்டுமே உயர்ந்துள்ளது. சதவீத அடிப்படையில் வெறும் 13% தான் உயர்வு பெற்றுள்ளது. இவை அனைத்தும், கல்விக்கடன் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிதித்துறை அளித்த விவரங்களின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ”வங்கிகளில் கல்விக்கடன் பெற்று வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக்கடனை அரசே திருப்பிச் செலுத்தும்” என்று வாக்குறுதி கொடுத்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் போட்ட முதல் கையெழுத்தில் மாணவர்களுக்கான கல்விக்கடனை முதலமைச்சர் ஜெயலலிதா அறவே மறந்து விட்டார். அந்த முதல் கையெழுத்தில் கல்விக்கடன் தள்ளுபடி அறிவித்திருந்தால் மதுரை லெனின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்.
இன்றைக்கு தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்விக் கடன் பெறுவது அதிகரித்து வருகிறது என்ற புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ள நிலையில், புதிய வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்கி 84 லட்சம் பேர் வேலையில்லாமல் காத்திருக்கும் நிலையை அறவே நீக்கிட அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல் வேலை வாய்ப்பு இல்லாத மாணவர்களின் கல்விக் கடனை அரசே திருப்பிச் செலுத்துவதுடன், கல்விக் கடன் பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளின் கடன்களையும் திருப்பிச் செலுத்த அ.தி.மு.க. அரசு முன்வர வேண்டும். வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் கருதி, மாணவர்களின் கல்விக் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழக அரசு கடந்த 3.2.2025-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அனைத்து மாணவ-மாணவிகளின் கடன்களையும் திருப்பிச் செலுத்த அ.தி.மு.க. அரசு முன்வர வேண்டும் என வலியிறுத்திய முதல்-அமைச்சர் கடந்த ஆண்டு பட்டியலின மாணவர்களின் கடன்களை தள்ளுபடி செய்தது வரவேற்கதக்கது. ஆனால் தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையில் தமிழக மாணவர்கள் என குறிப்பிட்டுவிட்டு பட்டியலின மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
மேலும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி (Write off proposal) செய்து அரசு ஆணையிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 15 ஆண்டுகாலமாக கல்விக்கடன் நிலுவையில் உள்ளதால் வங்கிகள் வாராக்கடன்கள் முடிவு செய்துள்ளதை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. வருங்காலங்களில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கும்போது நிபந்தனைகளுக்குட்பட்டது என்று குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]