திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை அருகே கடன் தொல்லை காரணமாக விவசாயி ஒருவர் விஷம் அருந்தி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

திருவண்ணாமலை அருகே உள்ள  கருந்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கண்ணாயிரம்.

இவர் விவசாய தேவைக்காக சுமார் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கி, 8 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும்  வறட்சியின் காரணமாக பயிர் கருகியதால், கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால், கடன் கொடுத்தவர்கள் கடன் தொகையை திருப்பித் தருமாறு கண்ணாயிரத்தை கேட்டு வந்துள்ளனர்.

இதன்காரணமாக மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.