மும்பை

மும்பையில் புறநகர் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு விடுத்து மும்பை புறநகர் ரெயிலில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்தார். காவல்துறையினர் உடனடியாக அந்த மொபைல் எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த நபரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர்.

அந்த அழைப்பு மும்பையில் உள்ள ஜுகு பகுதியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  காவல்துறையினர் அங்கு சென்று மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் 25 வயது இளைஞர் என்பதும், அவர் பீகாரில் இருந்து 10 நாட்களுக்கு முன்புதான் மும்பைக்கு வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

அந்த நபர் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்தபோது மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காவல்துறையினர் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதற்காக அவர் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.