ம்பால்

நேற்று மீண்டும் இம்பாலில் மேதேயி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதால் ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் 64 % பேர் உள்ள மேதேயி சமுதாய மக்கள் மலைப் பகுதிகளில் நிலம் வாங்க அனுமதி இல்லை.அந்த  மலைப் பகுதிகளில் குக்கி இன பழங்குடியினர் வசிக்கின்றனர். எனவே மேதேயி சமுதாய மக்கள் தங்களுக்குப் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த மே 3-ம் தேதி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குக்கி பழங்குடியினர் மணிப்பூரின் பல பகுதிகளில் ஒற்றுமை பேரணி நடத்தினர். பேரணியின் போது மேதேயி மற்றும் குக்கி பழங்குடியினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் வீடுகளுக்கும், கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டு இக்கலவரத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஒரு வழியாகக் கலவரம் ஓய்ந்து மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பிய நிலையில், தலைநகர் இம்பாலில் மீண்டும் இரு சமுதாயத்தினர் இடையே நேற்று மதியம் மோதல் ஏற்பட்டது. இம்பாலில் உள்ள நியூ செக்கான் என்ற இடத்தில் உள்ள சந்தையில் இடப்பிரச்சினை காரணமாக இந்த மோதல் ஏற்பட்டு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன.

இதனால் இங்குப் பாதுகாப்புப் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். மீண்டும் நேற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.