டெல்லி: ஜனாதிபதி வேட்பாளர் திருவுபதி முர்மு பிறந்த குக்கிராமத்துக்கு 75 ஆண்டுக்கு பிறகு, தற்போதுதான்  மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில்,  பல கிராமங்களுக்கு மின்சாரம் இன்னும் சென்று சேரவில்லை என்பதை ஒப்புக் கொள்வதில் எந்த தவறும் இல்லை  மோடி அரசு மீது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகி விட்டது. ஆனால், பல கிராமங்கள், மலைக்கிராமங்களில் இன்னும் மின்வசதி கொடுக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முர்முவின் சொந்த கிராமத்துக்கு தற்போதுதான் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு உள்ளது.

திரவுபதி முர்மு, ஒடிசா மாநிலம், மயூர்பன்ச் மாவட்டத்தில் உள்ள உபர்பேடா கிராமத்தில் பிறந்தவர். இந்த இடமானது பழங்குடியின மலைக் கிராமம். முர்மு தற்போது  வசித்து வரும் ராய்ரங்க்பூர் நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் இது அமைந்துள்ளது. உபர்பேடாவில் பதசாகி, துங்கிரிசாகி என்ற 2 குக்கிராமங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு கிமீ தொலைவில் அமைந்துள்ளன. இவற்றில் மொத்தமாக 3,500 பேர் வசிக்கின்றனர். இவற்றில் பதசாகி கிராமத்தில் முழுமையாக மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. துங்கிரிசாகியில் மின்சாரம் கிடையாது. இங்குதான் முர்முவின் உறவினர்கள் வசிக்கின்றனர். ஒடிசாவில் முர்மு கவுன்சிலர், எம்எல்ஏ, அமைச்சர் என பல பதவிகளை வகித்துள்ளார். அதேபோல், ஜார்கண்ட் ஆளுநர் பதவியையும் வகித்துள்ளார். இருந்தாலும், இவருடைய  சொந்த கிராமத்துக்கு மின்சார வசதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில், தற்போது,  முர்மு குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், துங்கிரிசாகி உட்பட இந்த கிராமம் முழுவதற்கும் மின்சார வசதியை ஏற்படுத்துவதற்கான பணியை ஒடிசா அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. இதற்கு மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்கான சிமென்ட் கம்பங்கள், மின்சார கேபிள்கள், டிரான்ஸ்பார்கள் மலைக்கு தூக்கி செல்லப்பட்டு உள்ளன. அடுத்த சில நாட்களில் முர்முவின் கிராமம், மின்சார ஒளியில் மின்ன உள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டிவிட்டில்,  ‘இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி கிடைத்துவிட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் முர்முவின் கிராமத்திற்கு மின்சார வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக செய்திகள் வருகின்றன. திரவுபதி முர்முவின் கிராமம் மட்டுமல்ல இந்தியாவின் பல கிராமங்களுக்கு மின்சாரம் சென்று சேரவில்லை. பல கிராமங்களுக்கு மின்சாரம் இன்னும் சென்று சேரவில்லை என்பதை ஒப்புக் கொள்வதில் எந்த தவறும் இல்லை.  கடந்த 75 ஆண்டுகளுக்காக இந்தியா அடைந்த வளர்ச்சி பெருமைப்பட கூடிய ஒன்று. இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடையும்.

இதற்கு முன்னாள் இருந்த அரசுகள் செய்தவற்றின் தொடர்ச்சியாக தான் பாஜக அரசு செய்து வருகிறது. முந்தைய அரசின் சாதனைகளை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.