சென்னை: ஆம்னி பேருந்து விவகாரம் தொடர்பான வழக்கில்,  தாம்பரம், போரூர், சூரப்பேட்டில் பயணிகளை இறக்கி ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையம் அவசர கதியில் திறக்கப்பட்டது. போதுமான அடிப்படை வசதிகள் முடியாத நிலையிலும், நகரங்களில் இருந்து அங்கு செல்ல போதிய பேருந்து மற்றும் ரயில் வசதிகள் செய்யப்படாமல் திறக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. ஆனால், அதை கண்டுகொள்ள திமுக அரசு,  தென் மாவட்டங்களுக்கு அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என அரசு ஜனவரி 24-ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன். சூரப்பட்டு, போரூர், தாம்பரம் ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிப்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பெருங்களத்தூரில் பயணிகளை இறக்க மட்டும் அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார்.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், அனைத்து ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கும் கோயம்பேட்டில் தான் கேரேஜ்கள் உள்ளன. அதனால், கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜரானார். அவர், தனியார் ஆம்னி பேருந்துகள் நகருக்குள் பயணிகளை ஏற்றிக் கொள்ள அனுமதி அளிக்கும் இடங்களில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, சென்னையில் அனைத்து இடங்களிலும் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதித்தால், கிளாம்பாக்கம் செல்லும் முன்பே பேருந்து நிரம்பி விடும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு வந்த நோக்கம் வீணாகி விடும் என நீதிபதி குறிப்பிட்டார்.

இதையடுத்து, எந்தெந்த வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகள், பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கப்படும் என்பது குறித்தும், மாற்று வழித்தடங்களும் அடையாளம் கண்டு வரைபடம் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையைப் பிப்ரவரி 9-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.