சென்னை

ம்னி பேருந்து ஓட்டுநர்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் மற்ற ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. எனவே ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்பியது.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கிளாம்பாக்கத்தில் போதிய இட வசதிகள் இல்லாததால் கோயம்பேட்டிலிருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்  கோரிக்கை வைத்தனர்.

இன்று போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பில் கிழக்கு கடற்கரைச் சாலை மார்க்கம் நீங்கலாக மற்ற அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த உத்தரவை மீறும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்தது.

அமைச்சர் சேகர்பாபுவும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவித்தார்.  இன்று கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கக்கூடாது என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நேரடியாக சென்று வலியுறுத்தினர்.

எனவே அவர்களுக்கும் ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பேருந்து உரிமையாளர்களும் தங்களால் திடீரென காலி செய்ய முடியாது எனப் பேருந்து உரிமையாளர்கள் கூறி உள்ளனர். இதையொட்டி கோயம்பேடா? கிளாம்பாக்கமா? என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன்,

“ஏற்கனவே தைப்பூசம் உள்ளிட்ட விடுமுறை தினங்களுக்கான முன்பதிவு முடிந்துவிட்டது. திடீரென நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டு, 30-ம் தேதிக்குள் கோயம்பேட்டை காலி செய்யும்படி கூறினார்கள். திடீரென கோயம்பேட்டில் இருந்து இயக்கக்கூடாது என்று சொன்னால் என்ன செய்வது? 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் திடீரென எப்படி இடத்தை மாற்ற முடியும்? இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் இந்த விவகாரத்தில் வழக்கு தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை”

என்று கூறியுள்ளார்.