டில்லி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ரூரல் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஒலிம்பிக் வீராங்கனை போட்டியிட உள்ளார்.

நேற்று மாலை காங்கிரஸ் கட்சி 9 பேர் கொண்ட தனது அடுத்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநில வேட்பாளர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இத்துடன் காங்கிரஸ் தனது கட்சியின் 325 வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்துள்ளது.

இந்த பட்டியலில் குஜராத் மாநிலத்தில் ஒரு தொகுதிக்கும், மகாராஷ்டிராவில் 2 தொகுதிகளுக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.

இதில் ஜெய்ப்பூர் ரூரல் தொகுதியில் கிருஷ்ணா பூனியா என்னும் ஒலிம்பிக் வீராங்கனை நிறுத்தப்பட்டுள்ளார். இவர் மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொண்ட தட்டு எறிதல் போட்டி வீராங்கனை ஆவார்.

கிருஷ்ணா பூனியா கடந்த 2010 ஆம் வருடம் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். இவரை எதிர்த்து போட்டியிடும் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ராதோட் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.