சென்னை: கொரோனா காலத்தில், கோடிக்கணக்கான மக்களை பாதுகாக்கும் பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்களை திமுக அரசு அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்றி வந்த 2400 பேரை தற்போதைய திமுக அரசு அதிரடியாக  பணி நீக்கம் செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில், பணியாற்றி பல ஆயிரம் பேரின் உயிர்காலை பாதுகாக்கும் பணியில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த செவிலியர்கள் டிசம்பர் 31ந்தேதியுடன் பணி இழந்துள்ளனர்.

இந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள்,  தங்களை  பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி  மாநிலம் முழுவதும் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு படிப்படியாக பணி வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களிடம் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால்,  மீண்டும், நிரந்தர ஒப்பந்த பணி வழக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்று கூறி, செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலத்தில் போராட்டம் நடத்திய செவிலியர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய நிலையில், ஆட்சியல் அலுவலகம் முன்பு கடும் வெயிலில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது . காவல்துறையினர், அவர்களை நேற்று மாலை  கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்/ இன்று அதிகாலை 3 மணிக்கு செவிலியர்களை எழுப்பிய காவல்துறையினர் அவர்களை மண்டபத்திலிருந்து வெளியேற்றினர். இருப்பினும், காவல்துறை கொண்டு வந்த பேருந்தில் ஏற மறுத்து செவிலியர்கள் நடந்து சென்றனர்.

வழியெங்கும் முழக்கங்கள் எழுப்பியபடி சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்றனர். கலைந்து சென்ற செவிலியர்கள் போராட்டத்தை தொடருவோம் என அறிவித்தனர். . எத்தனை கெடுபிடிகள் காவல்துறையினர் கொடுத்தாலும் தங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்று செவிலியர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். 

இந்த நிலையில், இன்று சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.