rigyajursama@outlook.com என்ற ஈ-மெயில் முகவரியை உருவாக்கியவர் ஆனந்த் சுப்பிரமணியம் என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமானதாக சி.பி.ஐ. தகவல்

2013 முதல் 2016 வரை தேசிய பங்குச் சந்தை தலைமைச் செயல் அலுவலராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணன் 2013 ம் ஆண்டு பதவியேற்றவுடன் தனது ஆலோசகராகவும் தேசிய பங்குச் சந்தையின் செயல் அதிகாரியாகவும் ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை நியமித்தார்.

இருவருக்கும் ரிக் யஜுர் சாம வேதங்களின் பெயரில் உருவாக்கப்பட்ட rigyajursama@outlook.com என்ற ஈ-மெயில் முகவரில் இருந்து வந்த தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்த ஈ-மெயில் முகவரியில் இருந்து வந்த கட்டளைக்கு ஏற்ப சித்ரா ராமகிருஷ்ணன் செயல்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து விசாரித்த செபி அதிகாரிகளிடம் அது தனக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக அருள் கூறும் ஹிமாலயத்தில் உள்ள ஒரு யோகியின் ஈ-மெயில் முகவரி என்று தெரிவித்திருந்தார் சித்ரா ராமகிருஷ்ணன்.

பங்கு வர்த்தகம் தொடர்பான அன்றாட நிகழ்வுகள் மட்டுமன்றி தேசிய பங்குச் சந்தை ஊழியர்கள் குறித்த விவரமும் பங்குச் சந்தையால் அங்கீகரிக்கப்படாத இந்த ஈ-மெயிலுடன் பகிரப்பட்டு வந்தது.

பல ஆண்டுகளாக சந்தேகத்திற்கு இடமான வகையில் பல்வேறு தகவல்கள் பரிமாறப்பட்ட இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆனந்த் சுப்ரமணியன் கைது செய்யப்பட்டார், சி.பி.ஐ. மேற்கொண்ட விசாரணையில் இந்த ஈ-மெயில் முகவரி ஆனந்த் சுப்ரமணியனால் உருவாக்கப்பட்டது என்பது இந்த முகவரியை அவர் பயன்படுத்தி வந்ததும் பல்வேறு சான்றுகள் மூலம் நிரூபணம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சித்ரா ராமகிருஷ்ணன் – ஆனந்த் சுப்பிரமணியன் இடையேயான இமயமலை யோகியின் ஈ-மெயில் தகவல் குறித்த மர்ம முடிச்சு அவிழ்ந்துள்ளதை அடுத்து இதன்மூலம் தேசிய பங்குச் சந்தையில் இவர்கள் நடத்திய பணமோசடி குறித்து விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பங்குச் சந்தையில் சித்ராவும் சித்த புருஷரும் நடத்திய சித்து விளையாட்டு…