கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவர, இந்தியாவில் தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அனுமதி, கூடுதலாக பல சர்ச்சைகளுக்கும் வித்திட்டுள்ளது.

முறையான ஆய்வகப் பரிசோதனைகள் செய்யப்படவில்லை மற்றும் சரியான பயன்விளைவுகள் கண்டறியப்படவில்லை மற்றும் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன உள்ளிட்ட பல்வேறான குற்றச்சாட்டுகள் வரிசைக்கட்டி நிற்கின்றன தடுப்பு மருந்துகள் தொடர்பாக.

எதற்காக, இப்படி அவசர அவசரமாக அனுமதியளிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அந்த தடுப்பு மருந்து முதற்கட்டமாக, மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவுப்பு, அந்த சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்தியுள்ளது.

அனுமதி வழங்கப்பட்ட தடுப்பு மருந்து பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது என்றால், அதை பிரதமர், ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், அதிகார வர்க்கத்தினர் என்று தொடங்கி, பிறகு, பொதுமக்களுக்கு வரலாமே! என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஆனால், டெல்லி ஆட்சியாளர்கள் இதற்கெல்லாம் காது கொடுப்பவர்களா என்ன? என்ற குரல்களும் ஒலிக்கின்றன.

கொரோனா வைரஸ் என்பது தொடர்பான பீதிக்கு அடுத்து, இப்போது கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான அச்சம் மக்களைத் தொற்றிக் கொண்டுள்ளது என்பதே உண்மை!