சென்னை: அரசின்  அறிவிப்புகள் வெற்று காகிதங்களாகவே உள்ளன. அரசு கொடுத்த கடன் பல மாதங்களாகியும் இன்னும் வந்து சேரவில்லை, முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்றும், அமைச்சர் சேகர்பாபுடன் சேர்ந்து உணவருந்தியும் வரவேற்பை பெற்ற  நரிக்குறவப் பெண் அஸ்வினி, தமிழகஅரசு மீது குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

கடந்த வருடம்  கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தின்போது, கோவில் நிர்வாகிகளால் விரயட்டிக்கப்பட்டவர்,  நரிக்குறவப் பெண் அஸ்வினி. மகாபலிபுரம் பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர். இவர் தான் விரட்டியடிக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியானது. அதில்,  அரசாங்கம்தானே அன்னதானம் போடுது, உங்க வீட்டுக் கல்யாண சாப்பாடு போடற மாதிரி அடிச்சு விரட்டறீங்க” என கேள்வி எழுப்பி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து, சர்ச்சையானது.

அதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த வருடம் தீபாவளி அன்று நரிக்குறவர்கள் தங்கியிருக்கும் பூஞ்சேரி பகுதிக்கு சென்று, அந்த பெண்ணை சந்தித்துடன்,பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், அவர்களுக்கு கடன் உதவி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு தீபாவளி நாளன்று, வங்கி கடனுதவி, அங்கன்வாடி வகுப்பறைகள் கட்டும் ஆணைகளை, 33 நபர்களுக்கு சிறுதொழில் தொடங்குவதற்காக தலா ரூ.10,000 வீதம் ரூ.3.30 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. மேலும் 12 நபர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீதம் 12 லட்சம் ரூபாய் கடனுதவியை முதல்வர் அளித்தார். அத்துடன், 6 பேருக்கு முதியோர் உதவித் தொகை; 21 பேருக்கு குடும்ப அட்டை, 88 பேருக்கு சாதிக் சான்றிதழ்களையும் அப்போது முதலமைச்சர் வழங்கினார். மேலும், 34 பேருக்கு நரிக்குறவர் நலவாரிய அட்டைகள், 25 நபர்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டைகளையும் முதல்வர் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் நடைபெற்ற கோவில் சமபந்தி விருந்தில், அமைச்சர் சேகர்பாபு, அந்த பெண்ணை அழைத்து, தன் அருகே அமரவைத்து உணவு சாப்பிட்டார். மாமல்லபுரம் அருகே உள்ள பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, அந்த பெண்ணுடன் உணவு அருந்தியதாக வீடியோ வெளியிட்டிருந்தார். அரசு மற்றும் அமைச்சரின் செயல்கள் வெகுவாக பாராட்டப்பட்டது.

ஆனால், அரசு அறிவித்த எந்தவொரு உதவியும் இதவரை தங்களுக்கு கிடைக்கவில்லை, அரசின்  அறிவிப்புகள் வெற்று காகிதங்களாகவே உள்ளன என முதல்வரிடம் நலத்திட்ட உதவி பெற்ற நரிக்குறவ பெண் அஸ்வினி குற்றம்சாட்டி உள்ளார். அரசு கடனுதவி  வழங்குவதாக கூறியிருந்தும், தங்களுக்கு கடை இல்லை உள்பட பல்வேறு காரணங்களை கூறி  தங்களுக்கு வங்கியில் இருந்து கடன் உதவி கிடைக்கவில்லை, “மேடையில் கடனுதவி கொடுப்பதுபோல போஸ் கொடுத்தார்கள். ஆனால், கடை இல்லை என்று கூறி, இதுவரை வங்கிக் கடன் தர மறுக்கிறார்கள்” என்று அஸ்வினியும், மற்ற நரிக்குறவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அரசுக்கு பல முறை மனு கொடுத்துள்ளதாகவும், மனுவில்,  தங்களுக்கு கடை எடுத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருப்பதாகவும் கூறியுள்ள அஸ்வினி,   இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்ததாகவும்  தெரிவித்துள்ளார். ஆனால் தங்களுக்கு கடை வாங்கிக் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தி உள்ளார். மேலும், சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வரும் மகாபலிபுரம் முழுவதும் நாங்கள் வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு என்ன ஒரு கடை கூட கிடையாது வங்கியில் சேர்ந்து லோன் கேட்டால் லோன் கொடுப்பது கிடையாது, கழிவறை கட்ட வருவதற்கு கொண்டுவரப்பட்ட செங்கலை கூட அதிகாரிகள்  எடுத்து சென்று விட்டார்கள் என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார் அஸ்வினி.

போஸ் கொடுத்தால் போதுமா..? தமிழகஅரசை விமர்சிக்கும் மநீம தலைவர் கமல்ஹாசன்…