சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் உள்ள திரு.வி.நகர் பேருந்து நிலையம் உள்பட வட சென்னையின் முக்கிய 6பேருந்து நிலையங்களில் நவீனமாக்கல் பணியை  சிஎம்டிஏ தொடங்கி உள்ளது.  அதன்படி,  தண்டையார்பேட்டை பணிமனை மற்றும் பேருந்து நிலையம், கண்ணதாசன் நகர், பெரம்பூர் – முல்லை நகர், திரு.வி. க. நகர், பெரியார் நகர், அம்பத்துார் ஆகிய பேருந்து நிலையங்கள், 50 கோடி ரூபாயில் புதுப்பொலிவு பெற உள்ளன. இத்திட்டங்களுக்கான இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் எந்தவொரு வசதிகளும் இல்லை என்றும், முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதன் காரணமாக,   கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை  அமர்வின்போது, சிஎம்டிஏ தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அப்போது, வடசென்னை உள்பட சென்னையின் பல பகுதிகளில் நவீன மாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம், ரூ.50 கோடி மதிப்பில், தண்டையார்பேட்டை பணிமனை மற்றும் பேருந்து நிலையம், கண்ணதாசன் நகர், பெரம்பூர் – முல்லை நகர், திரு.வி. க. நகர், பெரியார் நகர், அம்பத்துார் ஆகிய பேருந்து நிலையங்கள் புதுப்பொலிவு பெறும் என அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னையில் 6 பேருந்து முனையங்களில் பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் நவீன வகையில் மாற்றம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ)  முடிவு செய்து, .  அதற்கான பணிகளை சிஎம்டிஏ மேற்கொண்டு வந்தது. அதன்படி, நவீனமயமாக்கலுக்கு ஏற்ப இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன.

பேருருந்து நிலையங்களை சீரமைத்து பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையங்களில் உள்ள கழிவறைகள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன.  பேருந்து நிலையங்களின் பல பகுதிகளில்  இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்மை காணப்படுவதால், அதை செய்து, நவின எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. மேலும் பேருந்து நிலையம் முழுவதும்  சிசிடிவி கேமராக்கள் கொண்டு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்ட வருகிறது. மேலும், பேருந்து நிலையத்தின் மேற்கூரை, நவீனமாக்கப்படுவதுடன்,  சோலார் பேனல்கள், சுத்தமான ஓய்வு அறைகள், இருக்கை வசதிகள், குடிநீர் வசதி, காத்திருப்பு அறைகள், மட்டுமின்றி, வருமானத்தை ஈட்டும் வகையில், கடைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பேருந்து முனையத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டிடக் கலைஞர்களை கொண்டு வடிவமைப்புகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக ஏற்கனவே டெண்டர் கோரப்பட்டுள்ளது. திட்டங்களின் மொத்தச் செலவு ₹50 கோடி அதன்படி,  திரு.வி.க நகர் மற்றும் அம்பத்தூர் பேருந்து நிலையங்களில் பணிகளை தொடங்கப்பட்டுள்ளது. இநத் பணிகள்  அடுத்த ஆண்டு (2024)  இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடசென்னை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக பேருந்து நிலைய மேம்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பூங்காக்கள், கடற்கரை, திடக்கழிவு மேலாண்மை, பள்ளிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வடசென்னை முழுவதுமே புதியதாக மாற்ற சிஎம்டிஏ முயற்சி மேற்கொண்டு வருகிறது.