டில்லி:

பிரதமர் மோடியுடன் இந்த ஆண்டு பொருளாதாரத்தக்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நோபல் பரிசில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி உள்பட 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அபிஜித் பானர்ஜிக்கு இந்திய பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர்  உள்பட பல தரப்பினர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை நினைத்து, இந்தியா பெருமிதம் கொள்வதாக, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில்,அபிஜித் பானர்ஜி இன்று  டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் ந்தித்துப் பேசினார். இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில், புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார்.

அதில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு, மிகச்சிறப்பாக இருந்ததாக, பிரதமர் மகிழ்ச்சித் தெரிவித்திருக்கிறார். அனைவருக்கும் அதிகாரமளித்தல் என்ற அவரது  பார்வை தெளிவாக இருப்பதாகவும், பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

பல்வேறு பிரிவுகளில், இருவருக்கும் இடையே, ஆரோக்கியமான மற்றும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதாகவும், பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.

அபிஜித் பானர்ஜியின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திட மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குவதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

லோக்சபா தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பில், அபிஜித்பானர்ஜியின் பங்கு இருப்பதும், தமிழக அரசின் பொருளாதார ஆலோசனை குழுவிலும் அபிஜித் பானர்ஜி பங்குபெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதுபோல, மோடி அரசின் பொருளாதார கொள்கை குறித்தும,அபிஜித் பானர்ஜி அவநம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.