தர்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் கலக்கப்படுவதில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தர்பூசணி பழங்களின் ரசாயன நிறமியை ஊசிமூலம் செலுத்துவதாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஸ்குமார் கூறியிருந்தார்.

அவரது இந்த பேச்சுக்கு தர்பூசணி விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் இதனை ஆய்வு செய்து ரசாயன கலப்பு இல்லை என்பதை உறுதி செய்தனர்.

இந்த நிலையில் தர்பூசணி உள்ளிட்ட சாமானிய மக்களின் உணவுகளை குறிவைத்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின்போது, தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மேலும், தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சதீஷ்குமார் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.