புதுடெல்லி: தனியார் வசம் கைமாற்றிவிடப்பட்ட மத்திய அரசின் முந்தைய பொதுத்துறை நிறுவனங்களில், இனிமேல் இடஒதுக்கீட்டு முறை கிடையாது என்று மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டு நடைமுறையை எப்படியேனும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் – பாஜக சித்தாந்தம். அதற்கான அன‍ைத்து முயற்சிகளையும் மோடி அரசு செய்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்களை அசுர வேகத்தில் தனியார்மயமாக்கி வருகிறது மோடி அரசு. பொதுத்துறை நிறுவனங்களில், இடஒதுக்கீட்டு கொள்கை அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், தனியாருக்கு கைமாற்றி கொடுக்கப்படும் நிறுவனங்களில், பழையபடி இடஒதுக்கீட்டு கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது என்று அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளதாய் தெரிவிக்கப்படுகிறது.

“பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாக அதிகாரத்தை, தனியாரிடம் கைமாற்றி விடும்போது, அதன் பணியாளர்கள் பாதுகாப்பு குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி உத்திரவாதங்களை பெறுகின்ற வாய்ப்பு இருக்கிறதே ஒழிய, இடஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்ற வேண்டுமென நிர்ப்பந்திப்பது ஏற்புடையதாக இருக்காது மற்றும் சட்டப்பூர்வமாகவும் சாத்தியமில்லை” என்று மோடி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாய் கூறப்படுகிறது.