சென்னை

டிசாவில் நடந்த ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என அமைச்சர் மா சுப்ரமனியன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்டிரல், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மூலம் ரயிலில் பயணம் செய்தவர்களின் விவரங்கள் அவர்களின் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒடிசாவில் இருந்து சிறப்பு ரயில் அதிகாலை 4.40 மணிக்குச் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நடைமேடை 11-ஐ வந்தடைந்தது.  இந்த சிறப்பு ரயிலில் வந்த பயணிகளை அமைச்சர்கள் மா.சுப்ரமணியம் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் வரவேற்றுச் சிறப்பு ரயிலில் வந்த பயணிகளிடம் நலம் விசாரித்தனர்.

இந்த சிறப்பு ரயிலில் தமிழக பயணிகள் 137 பேர் அழைத்து வரப்பட்டு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.  செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம்,

“ஒடிசாவுக்குத் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க 6 மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் வந்தவர்களில் 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்து 8 பேர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

யாருக்கும் தீவிர சிகிச்சைக்கான பெரிய பாதிப்புகள் இல்லை. 305 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கத் தயார் நிலையில் உள்ளனர். 205 படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப் பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை”

என்று அவர் கூறினார்.