சென்னை: கூட்டணி குறித்து யாரும் எங்களுக்கு உத்தரவிட முடியாது; நாங்கள் தான் முடிவு செய்வோம் என்றும், மக்களவை தேர்தலில் திமுகவை வீழ்த்துவதே இலக்கு என்றும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று முற்பகல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இதில், அதிமுக தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த   கூட்டத்தில், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் பணிகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஆலோசனைகளை விரிவாக எடுத்துக் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும், செய்தியாளர்களை சந்தித்த  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  “திமுக அரசு மக்களிடம் செல்வாக்கை இழந்த அரசாக மாறிவிட்டது. அவர்கள் எவ்வளவு மேலே உயர வேண்டும் என்று நினைத்தார்களோ, அதிலிருந்து தற்போது சரிந்துவிட்டனர். எனவே, மக்கள் எப்போது தேர்தல் வரும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த ஆட்சியின் அவலங்களை எல்லாம் எடுத்துக் கூறுவதால், மக்கள் உணர்ந்துள்ளனர்.

2024-ல் நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலும் வந்தால், இன்னும் நல்ல விஷயம். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கும் வகையில், கிளைக் கழகத்தில் இருந்து மாவட்டச் செயலாளர்கள் வரையிலான நிர்வாகிகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

2024 மக்களவை தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே இலக்கு. பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். நாற்பதும் நமதே” என்றார்.

தொடர்ந்து கூட்டணி தொடர்பான கேள்விக்கு, “அன்றும், இன்றும் நாளையும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. இதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார். மேலும், “ஓ.பன்னீர் செல்வத்தை ஆண்டி என்று விமர்சித்த ஜெயக்குமார் அவர் கூட இருக்கும் 4 பேரை திருப்திப்படுத்த அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்” என்றார். தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வத்தின் நோக்கம் அதிமுகவை ஆட்சிக்கு வர வைக்கக் கூடாது என்பதே. தனக்கு தேவையில்லாத பாலை கீழே கொட்ட அவர் நினைக்கிறார். அவர்கள் நடத்தியது ஒரு நிறுவனத்தின் கூட்டம். அவரால் ஒன்றிணைக்க முடியாது” என்றார். “அதிமுக கொடி, பெயரை ஓபிஎஸ் பயன்படுத்துவது சரியல்ல என்றும் விமர்சித்தார்.

உட்கட்சிப் பிரச்சினை குறித்து  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  சி.வி. சண்முகம் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று கூறுகிறாரே என்ற கேள்விக்கு, “அதிமுகவின் வெற்றிக்கு தேவையான விஷயங்கள் குறித்து பேசினோம்” என்றார். மேலும், “உட்கட்சியில் பிரச்சினையே இல்லை. பிரச்சினையே இல்லாத ஒரு விஷயத்தை இங்கு நாங்கள் விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் குறித்து எந்தவொரு விவாதமும் இங்கு செய்யவில்லை.

எங்களுடைய ஒரே நோக்கம் 2024-ல் திமுவை வீழ்த்த வேண்டும். நாற்பதும் நமதே, நாடு நமதே என்பதற்கேற்ப இலக்கை நிர்ணயிப்பதற்காகத்தான் இந்த கூட்டம் நடந்ததே தவிர, ஆண்டிகள் சேர்ந்து ஒன்றாக மடம் கட்டுவார்கள் இல்லையா, அதுதான் ஓபிஎஸ். எனவே அவர்கள் குறித்து விவாதித்து எங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை.

அதேபோல், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணிதான். இந்த கூட்டணியில் இடங்கள் பகிர்வு குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்” ,  இந்த கூட்டணியில் இடங்கள் பகிர்வு குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்.கூட்டணி குறித்து யாரும் எங்களுக்கு உத்தரவிட முடியாது; நாங்கள் தான் முடிவு செய்வோம்.

இவ்வாறு பேசினார்.