டெல்லி: நாடு முழுவதும் நடத்தப்படும் தேர்வு நீட் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் விலக்களிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமையானது நடத்தி வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் தொடர்ந்து தான் வருகின்றன.

இந் நிலையில், நீட் தேர்வில் தமிழகம், புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க முடியுமா என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.  அதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறி இருப்பதாவது:

நீட் தேர்வில் விலக்கு கோரும் தமிழகம், புதுச்சேரி அரசுகளின் கோரிக்கைகளை ஏற்க முடியாது. நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

எனவே அதில் தமிழகம், புதுச்சேரிக்கு மட்டும் விலக்களிக்க முடியாது. இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956ன் படி அனைத்து மாநிலங்களுக்கும் நீட் தேர்வு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.