மும்பை

காராஷ்டிர மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் அமைச்சர் நிதின் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா தற்போது தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகப்  பொறுப்பு ஏற்றுள்ளார்.

பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு சிவசேனா கட்சி மக்களவையில் ஆதரித்து வாக்களித்தது.  இது கூட்டணிக் கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது.   ஆனால் மாநிலங்களவையில் இந்த மசோதா மீது நடந்த வாக்கெடுப்பில் சிவசேனா கட்சி கலந்துக் கொள்ளவில்லை.

மகாராஷ்டிர மாநில அமைச்சரும் காங்கிரஸ் பிரமுகருமான நிதின் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர் மகாராஷ்டிர மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமல்படுத்த மாட்டோம் என உறுதி அளித்துள்ளார்.  அத்துடன் இந்த மசோதாவை சிவசேனா தலைவரும் முதல்வருமான உத்தவ் தாக்கரேவும் நிராகரிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.