கோவை: கோவையில் அனைத்து அரசுத்துறைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை காரணமாக 19வது நாளாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் 19-ந் தேதி ஸ்பெயினில் இருந்து கோவை திரும்பிய கல்லூரி மாணவிக்கு முதல் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்ற தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கோவையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை சிறப்பு கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது.
ஆரம்பத்தில் பொதுமக்களிடம் இருந்து எடுக்கப்படும் சளி, ரத்த மாதிரிகள் சென்னை அனுப்பப்பட்டு, அங்குள்ள ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது. இதனால் முடிவுகள் தெரிய காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து கோவையில் கொரோனா பரிசோதனை ஆய்வகம்  தொடங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 146 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் புற்றுநோய் பாதித்த ஒருவர் மட்டும் உயிரிழந்தர். மீதமுள்ள 145 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் கடந்த 3ம் தேதி கடைசியாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பின் கடந்த 19 நாட்களாக கோவையில் புதியதாக கொரோனா தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.