டெல்லி: டெல்லியில் நடைபெற்ற தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல்காந்தி, மாநிலத்தில் ஆட்சி செய்யும் சந்திரசேகரராவ் தலைமையிலான  டி.ஆர்.எஸ்.கட்சியுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், மத்திய பாஜக அரசுக்கு எதிரான  எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் டி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதுபோல மம்தா மற்றொரு புறம் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக் கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர்கள் காங்கிரஸ் கட்சி தவிர்த்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால், தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி இடம்பெறாமல், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் அது பாஜகவுக்கு சாதகமாகமே அமையும் என அரசியல் விமர்சகங்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், அங்கு ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ் கட்சிகள் திட்டம் தீட்டி வருகின்றன. அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,  டெல்லியில் உள்ள தமது இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு தெலுங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணு கோபால் உட்பட தெலுங்கானா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 30 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையின்போது  தெலுங்கானாவில் முதல்வர் கேசிஆர் தலைமையிலான மாநிலத்தில் தற்போது ஆட்சியில் உள்ள டிஆர்எஸ் கட்சியுடன் எந்த கூட்டணியும் அமைக்காது என்று ராகுல் காந்தி தெளிவுபடுத்தியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த,   காங்கிரஸ் மூத்த தலைவர் ரேவந்த் ரெட்டி, விவசாயிகள், பணவீக்கம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் நெல் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ராகுலுடன் தாங்கள் விவாதித்ததாகவும், ராகுல்காந்தி தெலுங்கானா வர அழைப்பு விடுத்ததாகவும், அவர் அதை ஏற்று இந்த மாதம் தெலுங்கானாவுக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

மேலும், மாநிலத்தில் ஆளும் டிஆர்எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் போராடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.