சிட்னி: இந்திய அணியில் பும்ரா, முகமது ஷமி மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இருந்தாலும், நியூஸிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் போல், பவுன்சர்களை வீச இந்திய அணியில் ஆளில்லை என்று ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் & பேட்ஸ்மேன் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “இப்போதைக்கு நீல் வாக்னர் பவுன்சர்களை வீசித் தாக்குவது போல், உலகில் தற்போதைக்கு வேறு பவுலர்கள் இல்லை. அவரது பந்துகளில் ரன் எடுப்பது கடினம் மற்றும் அவர் விக்கெட்டுகளையும் வீழ்த்துவார்.

இந்திய பவுலர்களிடம் ஓரளவு எதிர்பார்க்கலாம்; ஆனால் வாக்னர் போல் துல்லியமாக இருக்காது. துல்லியமாக, பவுன்சர்களை வீசும் ஒரு பவுலரை, நான் வாக்னருக்குப் பிறகு எதிர்கொண்டதில்லை.

இந்தியாவுக்கு எதிரானத் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இதனை, பலரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். நிச்சயமாக, இந்தியாவை வீழ்த்துவது கடினமே. அவர்கள் ஆக்ரோஷமான அணி.

அதுவும், விராத் கோலி தலைமையில் களத்தில் அவர் வெளிப்படுத்தும் முனைப்பு அனைவரையுமே தூண்டுவதாக இருக்கும். அவரின் முதுகில் இந்திய வீரர்கள் ஏறிப் பயணிப்பார்கள். எனவே, சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” என்றார் மேத்யூ வேட்.