சென்னை:
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆளுநருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது, பெண் பத்திரிகையாளர் கன்னத்தை தட்டிய ஆளுநர் பன்வாரிலாலின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, மன்னிப்பு கேட்க வேண்டும் இந்தியா முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்து ஆளுநர், பிரதமர், குடியரசு தலைவர் ஆகியோருக்கு இமெயில் மூலம் புகார் தெரிவித்திருந்தனர். சென்னை பத்திரிகையாளர் மன்றமும் வருத்தம் தெரிவிக்க கோரியிருந்தது.
இதையடுத்து ஆளுநர் சம்பந்தப்பட்ட அந்த பெண் பத்திரிகையாளருக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கிடையில், பேராசிரியை நிர்மலாவின் ஒலி நாடாவில், மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகையும் சிக்கி உள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநர் தன்னிச்சையாக விசாரணை கமிஷன் அமைத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக திமுக இன்று திடீரென போராட்டத்தில் குதித்தது. மேலும், ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், பன்வாரிலாலே திரும்பிப்போ என சமூக வலைதளங்களில் ஹாஸ்டேக் டிரென்டிங்காகி வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆளுநர் நாளை டில்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.