சென்னை: கோவை கார் வெடிப்பு விபத்து தொடர்பாகதமிழக தலைமைசெயலர் இறையன்பு தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில்  உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, ஏடிஜிபி டேவிட்சன் தேவர்சிவாதம் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக மத்தியஅரசின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார். ஆனால், காரில் இருந்த குண்டு வெடித்துதான், காரில் உள்ள சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. மேலும், காரில் கிடைக்கப்பெற்ற பாஸ்பரஸ், ஆணி போன்றவை குண்டுவெடிப்பை உறுதி செய்கின்றன. மேலும், கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஜமேஷ் முபினுக்கு உதவி செய்த 5 பேரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தமிழகஅரசு விசாரணை மேற்கொள்ளும் என்று டிஜிபி கூறிய நிலையில், இன்று காலை கோவை வந்த  தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ அதிகாரிகள் தனி தனி குழுக்களாக பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோட்டையில் நடைபெறும் ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை கார் வெடிப்பு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இனி எடுக்கப்போகும் நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை குறித்து ஆலோசிக்க பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை கார் குண்டு வெடிப்பு: தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை….