நீட் குழப்படிகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்திய மாணவி அனிதா, தனக்கு தீர்வு கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்.

“நெற்றிக்கண்” இதழ் கட்டுரை

இவரது மரணம் குறித்து நெற்றிக்கண் என்ற வார இதழில் வெளியான செய்தி பின்வருமாறு:

“அனிதாவின் அண்ணன் மணிரத்தினம், செந்துறை ஒன்றிய தி.மு.க. செயலாளர்  ஞானமூர்த்தியை சந்தித்து, தனது தங்கை அனிதாவுக்கு பி.ஈ. படிக்க உதவி செய்யுங்கள் என்றார். அவர், மணிரத்தினத்தை அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கரிடம் அழைத்துச் சென்றார். அவர், தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினிடம் அழைத்துச் சென்றார்.

ஸ்டாலின், நளினிசிதம்பரத்தின் உறவினர் பிரபு மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வைத்தார். அனிதாவும் அவரது அண்ணன் மணிரத்தினமும் விமானத்தில் டில்லி சென்றனர். அவர்களுடன்  ஸ்டாலினுக்கு விசுவாசமான சிலரும் சென்றனர். அங்கு அசோகா ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே நீட் தேர்வுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது.

“நீட் இல்லாவிட்டால் அப்துல்கலாம் படித்த ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படிப்பேன் என்று தைரியமாக நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்த அனிதா, மு.க.ஸ்டாலின் சந்திப்பு…  டில்லி.. அசோகா ஓட்டல்… சுப்ரீம் கோர்ட்.. என்று கிளுகிளுப்புக்கு ஆளானார். தீர்ப்பு பாதகமானதால்  மனது தளர்ந்தார்.

விரக்தி அடைந்த அனிதா, தனது அண்ணன் மணிரத்தித்திடம், “ நான் என்ஜினியரிங் படிப்பிலாவது சேர்ந்திருப்பேன். என்னை மல்லுகட்டி தி.மு.க.காரர்களிடம் அழைத்துச் சென்று என் படிப்பையே வீணாக்கிவிட்டாயேடா” என்று அழுதார்.

மணிரத்தினம், “ உன் படிப்பு போனால் என்னடி.. நீ செத்தால்கூட பரவாயில்லை.. தி.மு.க.தான் என் உயிர் மூச்சு.. எனக்கு செலவுக்கு பணம் கொடுக்க தி.மு.க.வில் ஞானமூர்த்தி அண்ணன், சிவசங்கர் அண்ணன், செல்வராஜ் அண்ணன் இருக்காங்க” என்று கூறி அனிதாவை கடுமையாக அடித்துள்ளார்.

இதன் காரணமாக விரக்தியில் யாரிடமும் பேசாமல் இருந்த அனிதா, 1.9.2017 அன்று தனது வீட்டில் அம்மாவுக்கு படையல் செய்த புடவையில் தூக்கு மாட்டி இறந்துவிட்டார்” என்று 5.9.2017 தேதியிட்ட “நெற்றிக்கண்” என்ற இதழில் கட்டுரை ஒன்று “முருகன்” என்பவர் பெயரில் வெளியாகி உள்ளது.

தற்கு, அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் தனது முகநூல் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அந்த பதிவு:

மணிரத்தினம் முகநூல் முகப்பு

“நெற்றிக்கண் முருகன், என் தங்கையின் இழப்பிலிருந்து வெளிவர முடியுமா என்று தெரியவில்லை?? இருப்பினும் தமிழகத்தின் தங்கை அனிதாவிற்காக நான் பேசித்தான் ஆக வேண்டும்.

நெற்றியில் கண் என்பது அறிவியலுக்கு எதிரானதல்லவா? அறிவியலுக்கு புறம்பானது அனைத்தும் உண்மைக்கு புறம்பானதே, உங்களின் நெற்றிக்கண்ணும் அப்படித்தான்.

திமுகவின் செந்துறை ஒன்றிய செயலாளர் அண்ணன் ஞானமூர்த்தி என்று தெரியும் அவரை நான் பார்த்திருக்கிறேன் இதுநாள் வரை சந்தித்தது இல்லை. இருக்கட்டும்.  ஞானமூர்த்தி அண்ணன்தான் என்னை சிவசங்கர் அண்ணனிடம் அழைத்துச் சென்றதாக சொல்கிறீர்கள்.

நான் முதன் முதலாக சிவசங்கர் அண்ணன் அவர்களை சந்தித்தது ஜூலை 12 அன்று தி.க தலைமையில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில்தான், அங்கு கூட நான் ஞானமூர்த்தி அண்ணனை பார்க்கவில்லை. சிவசங்கர் அண்ணனை சந்தித்த பத்து நாட்களுக்குப் பிறகுதான் (23/07/2017) நாங்கள் பொறியியல் கலந்தாய்வுக்கே சென்றோம். அப்படியிருக்கையில் பொறியியல் படிக்க எப்படி உதவி கேட்டிருக்க முடியும்?

ஜூலை 12 அன்று அனிதா பற்றி முகநூலில் அண்ணன் சிவசங்கர் அவர்கள் பதிகிறார்கள், அதைப்பார்த்து மாணவர் அமைப்பினர் என்னை தொடர்பு கொண்டு ஜூலை 17 பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தனர், ஜூலை 20 கால்நடை மருத்துவ கலந்தாய்வு, ஜூலை 23 பொறியியல் கலந்தாய்வு அப்படியே முடித்து விட்டு வந்து விடலாம் என்று சென்னை கிளம்பினோம். பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்த பிறகு, அண்ணன் பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களை முதன்முதலாக சந்தித்தேன். அன்றே எதிர்க்கட்சித் தலைவர்களை மாணவர்கள் அனைவரும் சந்தித்தோம். நான் சந்திக்க துடித்தது அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களைத்தான். அன்று திருநெல்வேலி சென்று விட்டதாக சொன்னார்கள்.

மணிரத்தினம் பதிவு

முதலில் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி சென்று தோழர்கள் ஹமீது அன்சாரி மற்றும் தனியரசு அவர்களையும் சந்தித்தோம், அங்கிருந்து பெரியார் திடல் சென்று ஆசிரியர் மற்றும் கவிஞர் அவர்களை சந்தித்தோம், பெரியார் திடலில் உணவருந்தினோம், தளபதி அவர்களை சந்திக்க மாலையில் நேரம் ஒதுக்கியுள்ளதாக சொன்னார்கள், அதன் பின்புதான் நான் சிவசங்கர் அண்ணன் அவர்களிடம் தளபதியை சந்திக்க போகிறோம் என்று சொன்னேன்(அவர் என்னை தளபதியிடம் அறிமுகப்படுத்தவில்லை).

CPI, CPM தோழர்களை சந்தித்து விட்டு மாலையில் அண்ணா அறிவாலயத்தில் தளபதி அவர்களையும் சந்தித்து எங்கள் கோரிக்கைகளை வலியுதித்தினோம், தளபதியுடான சந்திப்புதான் நீண்ட சந்திப்பு. அவசரப்படாமல் நாங்கள் அனைவர் சொன்னதையும் காதுகொடுத்து கேட்டார்.

அடுத்த நாள் சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் (த.நா)தலைவர் திருநாவுக்கரசர் அவர்களை சந்தித்தோம் . அன்றும் திருமா அண்ணன் சென்னையில் இல்லை.
அடுத்த நாள் முதல்வரை சந்திக்கலாம் என்று சட்டப்பேரவை சென்றோம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை மாலையில் சந்தித்தோம்,தமிழக அரசு மட்டும் தனியாகப் போராடிக் கொண்டிருக்கிறது, நீட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் இது போன்று முன்வர வேண்டும், நீங்கள் எல்லாம் வந்திருப்பது மகிழ்ச்சி, இன்று இரவு நீட் தொடர்பாக பேசுவதற்கு டெல்லி செல்வதாக சொன்னார்கள்.

அனிதா – மணிரத்தினம் 

அதன் பிறகு ஆகத்து 16 அன்று மாலை அரசு சார்பாக நீட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களை அரசு செலவில் உச்ச நீதிமன்றம் அழைத்துச் செல்கிறார்கள் இரவுக்குள் சென்னை வரை இயலுமா என்று கேட்டார்கள், இரவுக்குள் வர முடியாது என்று சொல்லி விட்டேன்.

அதன்பிறகுதான் இரவு பிரின்சு கஜேந்திர பாபு அண்ணன் அவர்கள் என்னை அழைத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களும் கருணாஸ் MLA அவர்களும் தற்போதுதான் பேசினார்கள் நாளை உச்ச நீதிமன்றத்தில் நீட் தொடர்பான வழக்கு நடைபெற உள்ளதால், தொலைக்காட்சியில் மட்டும் பேசினால் போதாது பாதிக்கப்பட்ட மாணவர் யாரையாவது அழைத்து வாருங்கள் என்று சொன்னதாக சொன்னார், செலவுகளை நான் பார்த்துக்கொள்கிறேன் வரமுடியுமா மணி என்று கேட்டார்,

அரசு அழைத்தும் செல்ல வில்லை என்றால் அது நல்லா இருக்காது, இந்த ஒரு ஆண்டுக்கு மத்திய அரசு எப்படியும் விலக்கு வழங்கி விடும் என்ற ஆசையிலும் இரவு சென்னை கிளம்பி ஆகத்து 17 விடியற்காலை விமான நிலையம் வந்தடைந்தேன் எனக்கு முன்பே பிரின்சு அண்ணன் காத்துக் கொண்டிருந்தார்.

விமான நிலையத்திலேயே காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, ஆளுக்கு இரண்டு இடலி சாப்பிட்டு விட்டு 9.50 விமானத்திற்கு காத்திருந்தோம்,

அந்த சமயத்தில்தான் சிவசங்கர் அண்ணன் என்னை தொடர்பு கொண்டு மணி டெல்லி போறீங்களா? NEWS 18 குணசேகரன் கேட்டார் உங்கள் எண்ணுக்கு அழைக்க சொல்கிறேன் என்றார், அதற்குள் தோழர் குணசேகரன் அவர்கள் பிரின்சு அண்ணன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு அனிதாவிடம் பேசினார்.நாங்கள் மூன்று பேர் மட்டும்தான் டெல்லி சென்றோம், மதியம் இரண்டு மணியளவில் உச்சநீதிமன்றத்தை அடைந்தோம். மதியம் சாப்பிடக்கூட நேரமில்லை மாலையில் சம்சா மட்டும் சாப்பிட்டோம்,இரவு 9.30க்கு சென்னைக்கு விமானம், இரண்டு மணிநேரம் முன்கூட்டியே செல்ல வேண்டும்.நள்ளிரவு 12.30க்கு சென்னை வந்தோம்.இரவு முழுவதும் என் மடியில்தான் என் தங்கை தூங்கினார்.

பெரியார் நினைவிடத்தில் அனிதா – மணிரத்தினம்

காலை 6.30க்கு வீட்டிற்கு வந்து விட்டோம்.அசோகா ஹோட்டலும் எங்கு இருக்கு என்று தெரியாது? இதுநாள் வரை விமானக்கட்டணம் கூட எவ்வளவு ஆயிற்று என்றும் தெரியாது?

அது சரி திமுகவில் யார் செல்வராஜ் யார் என்றே எனக்குத் தெரியாது.
எனது முகநூல் பதிவுகளை எல்லாம் புரட்டிப் பாருங்கள் திமுக ஆதரவு பதிவினை எங்காவது காட்ட முடியுமா?

நான் இதுநாள் வரை என் தோழிகளைக்கூட வாடி, போடி என்று அழைத்தது இல்லை, அப்படி எங்களை வளர்க்கவும் இல்லை.

நானோ, எங்கள் தந்தையோ,என் தம்பிகளோ ஒருநாள் கூட அனிதாவை நோக்கி கை ஓங்கியது கூட இல்லை.

ஒருவேளை திமுக ஆளுங்கட்சியாக இருந்திருந்தாலும் அரசின் உதவிகளை நிராகரித்து இருப்போம்.

உங்கள் தங்கை, தாயை கொன்று உங்க வேலை முன்னேற்றத்திற்கு பயன்படுத்த உங்களின் புத்தி வேலை செய்யலாம்..

பொய்களோடு எதையும் கலக்காமல், வெறும் பொய்களை மட்டும் எழுதியதற்கு பாராட்டுக்கள்..
நெற்றிக்கண்ணே….” என்று மணிரத்தினம் பதிவிட்டுள்ளார்.