சென்னை

பிரதமர் மோடி கடந்த 2016 ஆம் ஆண்டு இதே நவம்பர் 8 ஆம் தேதி அன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்ததை நெட்டிசன்கள் கூறி குமுறி வருகின்றனர்.

பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டு புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், மக்கள் தங்கள் வசமுள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்தார்.

இந்த நடவடிக்கை கருப்பு பணத்தை ஒழிக்கவும் கருப்புப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவோரை அடையாளம் காணவும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பணத்தை மாற்றுவதற்குக் காலக்கெடுவும் விதிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டதுடன் பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள பணத்தை மாற்றுவதற்காக வங்கிகளில் குவியத் தொடங்கினர்.

பலர் குறித்த நேரத்திற்குள் பணத்தை மாற்ற முடியாம; அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பெரிதும் சிரமப்பட்டனர்.  இன்று பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட தினம் என்பதால் மக்கள் தாங்கள் சந்தித்த இன்னல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

வங்கிகளில் பணத்தை மாற்றுவதற்காகக் காத்திருந்து பட்ட கஷ்டங்கள் மற்றும் அதுதொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும், பிரதமர் மோடியையும் கடுமையாக சாடியுள்ளனர். குறிப்பாக எதிர்க்கட்சியினர், பிரதமர் மீது தாறுமாறான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். இதனால் கருப்புப் பணம் ஒழியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளில் சொத்து வாங்கியவர்களில் 76 சதவீதம் பேர் சொத்து மதிப்பின் ஒரு பகுதியை ரொக்கமாகச் செலுத்தியிருப்பதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது தவிர வாகனம், கேட்ஜெட் மற்றும் அதிக மதிப்புள்ள பெரும்பாலான வீட்டு உபயோகப் பொருட்களுக்கான பணப் பரிமாற்றம் டிஜிட்டல் முறையிலும் ரசீது மூலமாகவும் நடப்பதாகக் கணக்கெடுப்பு கூறுகிறது.

பெரும்பாலான மக்கள் மளிகைப் பொருட்கள், உணவு மற்றும் உணவு விநியோகம் மற்றும் வீட்டு உதவி, வீடு பழுதுபார்ப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு இன்னும் ரொக்கப் பணத்தைப் பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.