டில்லி

மக்களவையில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல்  செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்த நெட்டிசன் கருத்து வெளியாகி உள்ளது.

நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிருக்கான 33 % இட ஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.  இந்த மசோதா, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இன்று மகளிருக்கு 33 %  இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் புதிய நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் அவை கூடியதும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் அலுவலாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது  நாளை, மக்களவையில் மசோதா மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இது குறித்த ஒரு ஆய்வுக் கருத்து டிவிட்டரில் வெளியாகி உள்ளது.

அதில்

”தொகுதி வரையறைக்குப் பிறகுதான் மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமலுக்கு  வருமாம்!

1. தொகுதி வரையறை செய்ய மக்கள் தொகை கணக்கெடுப்பு புதிதாக நடைபெற வேண்டும்.

2. அதை செய்ய அடுத்த பொதுத் தேர்தல் முடிய வேண்டும்.

3. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் சர்ச்சை இல்லாமல் ஒருமித்த கருத்தோடு நிறைவேற்ற இப்போதைக்கு இந்த பழைய ஃபர்னிச்சர்தான் கிடைத்திருக்கிறது!

எனவே, அதை எடுத்து வைத்து தனது வழக்கமான ஜும்லா ஆடுகிறது பாஜக.” 

என்று கூறப்பட்டுள்ளது.