சென்னை: நீட் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஏ.கே.ராஜன் குழு இன்று முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.
நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த பாதிப்பு குறித்து ஆராய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து, ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து, ஏ .கே .ராஜன் குழு , நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் கருத்துகளை பெற்றது . பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்களை பெற்று, ஆய்வு நடத்தி அறிக்கை தயார் செய்து வந்தது.
இதற்கிடையில், ஏகே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கும் நேற்று நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, நீட் தாக்கம் குறித்த ஏகே.ராஜன் குழுவின் ஆய்வுப் பணிகள் முடிந்துவிட்டதாகவும் , நீட் தேர்வால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான் என்றும் நீதியரசர் ஏ .கே .ராஜன் கூறியுள்ளார் .
இதுதொடர்பான ஆய்வு அறிக்கையை நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்து, அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும்.